.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, July 26, 2019

அல்-குர்ஆன் ஓர் இறை வேதமா?

1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத அன்றைக்கு இறைவனுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இதைச் சொல்லி இருக்கவே முடியாது என்பதையும், இறைவன் தான் சொல்லி இருக்க முடியும் என்பதையும் நேர்மையான பார்வையுடையவர்களால் அறிந்து கொள்ள இயலும். இதற்கான ஆதாரங்களாக பின்வருவனற்றை எடுத்துக் காட்ட முடியும்.


1. பெருவெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு 

வானங்களும்,பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம்என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆன்  21:30)

குர்ஆன் கூறும் பெரு வெடிப்புக் கொள்கை இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றிப் பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன. திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரேயொரு சிறிய பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும் இன்ன பிற கோள் களாகவும், துணைக்கோள்களாகவும், கோடானுகோடி விண்மீன்களாகவும் உருவாயின. பெரு வெடிப்புக் கொள்கை (இண்ஞ் இஹய்ஞ் பட்ங்ர்ழ்ஹ்) என இன்றைய அறிவியல் உலகில் கூறப்படும் கோட்பாட்டைத் திருக்குர்ஆன் அன்றே கூறுகின்றது. இவ்வசனத்தில் (21:30) வானம், பூமி அனைத்தும் ஒரே பொருளாக இருந்து அதை நாமே பிளந்தெடுத்தோம் என்று கூறப்படுகின்றது. அதன் பின்னர் ஏற்பட்ட புகை மண்டலமும் அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள் உருவாக்கப்பட்டதையும் திருக்குர்ஆன் 41:11 வசனத்தில் கூறுகின்றது. இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாகத் திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். எனவே திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.    

2. கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும்

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்.பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக296 ஆக்கினோம்.அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (திருக்குர்ஆன்  23:14)

கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது "பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்" என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும், மனிதனின் கருவும் இந்தக் கால கட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும். மூன்று மாதங்கள் கழிந்த பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும். இதைத் தான் "பின்னர் வேறு படைப் பாக மாற்றினோம்" என்ற சொற்றொடர் மூலம் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது

3. விண்வெளியில் எவ்வளவு தொலைவு மனிதனால் செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது.

பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! (திருக்குர்ஆன்  17:37)

பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று (17:37) சொல்கின்றது. இவ்வசனம் மிகப் பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர். "நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை" என்ற கருத்துப்படவே பெரும்பாலான மொழி பெயர்ப்புக்கள் அமைந்துள்ளன. ஆரம்ப காலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.

மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக்கூடாது என்ற செயலுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வசனத்தின் சரியான பொருள் இது தான். "நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை" மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமியின் ஆழத்தில் அப்படியெல்லாம் செல்ல முடியாது. பெரிய மலையின் உயரம் எவ்வளவோ அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பது தான் இவ்வசனம் கூறும் கருத்தாகும். நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான். இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம். மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். 

மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய்க் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான். பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும். இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான். உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத் திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை. உலகின் மிக உயரமான இமயமலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். 

இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள். பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன. பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டாலே காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை. மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச் செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது. இந்தப் பேருண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறை வேதம் என்பது நிரூபணமாகின்றது.

4. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம்

 முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்த போது ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை. (திருக்குர்ஆன்  18:90)

துல்கர்கணைன் அவர்கள் மேற்கொண்ட ஒரு நீண்ட பயணத்தைப் பற்றி இவ்வசனம் (18:90) கூறுகிறது. துல்கர்ணைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் மேற்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்து விடுகிறார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. உலகம் உருண்டையாக இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். அப்போது தான் கிழக்கு நோக்கிப் புறப்பட்டவர் மேற்கு நோக்கி வந்து சேர முடியும். ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும் போது கூட மிகக் கவனமாக இந்த அறிவியல் உண்மையைக் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு மற்றொரு சான்று.

5. விரல்ரேகை மனிதனின் முக்கிய அடையாளம்

அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள். (திருக்குர்ஆன்  75:4)

விரல் நுனிகளையும் சீராக்குதல் மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று இவ்வசனத்தில் (75:4) கூறுகிறான். விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகளெல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய காரணம் என்ன வென்றால், மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான். ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்பக் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த அறிவியல் உண்மையை உள்ளடக்கி அல்லாஹ் கூறுகிறான்.

6. தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, தேனீக்களின் வயிற்றிலிருந்து தான் வெளியாகின்றது

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது. (திருக்குர்ஆன்  16:68,69)

தேனீக்களும், தேனும் இவ்வசனத்தில் (16:68,69) தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது. இதில் நான்கு அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. தேனீக்கள் தேனைச் சேமிப்பதற்காக எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும், எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்கு வந்து சேர்ந்து விடும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "நீ எளிதாகச் சென்று திரும்பு" என்று தேனீக்களுக்கு இறைவன் உள்ளுணர்வு ஏற்படுத்தியிருப்பதாக இவ்வசனத்தில் கூறுகின்றான். தேனீக்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் அவை எளிதாகத் திரும்பி விடும் என்பதையும் அதற்கேற்ப தேனீக்களுக்குள் உள்ளுணர்வை ஏற்படுத்தியிருப்பதையும் திருக்குர்ஆன் அன்றே கூறி விட்டது.

 இரண்டாவதாக, தேனீக்கள் மலர்களிலும் கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது என்றும் அந்தக் கூட்டில் தான் தேன் தயாரிக்கப்படுகிறது என்றும் நம்பி வந்தனர். இது தவறு என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேனீக்கள் அந்தத் திரவத்தைத் தமக்கு உணவாகத் தான் உட்கொள்கின்றன. தேனீக்களின் உடலுக்குள்ளே தான் அத்திரவத்தைத் தேனாக மாற்றுகின்ற பணி நடக்கின்றது என்றும், தேனாக மாற்றுவதற்கு கூட்டில் எந்தத் தொழில்நுட்பமும் இல்லை என்றும் கண்டறிந்துள்ளனர். இந்த உண்மையையும் திருக்குர்ஆன் இவ்வசனத்தில் சொல்கிறது. "மலர்களிலிருந்தும், கனிகளிலிருந்தும் நீ சாப்பிடு" என்று கூறு வதன் மூலம் அவை அத்திரவத்தை உணவாகத் தான் உட்கொள்கின்றன என்ற உண்மையை திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது.

மூன்றாவதாக, தேனீக்கள் மலர்களிலிருந்து உணவாக உட்கொண்ட இந்தத் திரவம் தேனீக்களின் வயிறுகளில் ரசாயன மாற்றம் அடைந்து தேனாக உற்பத்தியாகின்றது. தேனீக்களின் கழிவு வெளியேறும் துவாரத்தைத் தவிர, தேன் வெளியேறுவதற்காக மற்றொரு துவாரமும் தேனீக்களிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் துவாரம் வழியாக வெளியேறும் தேன் தான் தேன் கூடுகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன், தேனீக்கள் சாப்பிட்ட பிறகு அதன் வாயிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல், "அதன் வயிறுகளிலிருந்து தேன் வெளிப்படுகிறது" என்று கூறுகின்றது. சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எந்த மனிதனாலும் கூறுவதற்குச் சாத்தியமில்லை. நான்காவதாக, தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். அதுவும் இவ்வசனத்தில் கூறப்படுகிறது. "திருக்குர்ஆன் மனிதனது வார்த்தை இல்லை" என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாக இது அமைந்துள்ளது.

7. கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. (திருக்குர்ஆன்  55: 19,20)

கடல்களுக்கு இடையே திரை இவ்வசனங்களில் (27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத தடுப்பு உள்ளது என்றும் இதனால் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து விடாது என்றும் கூறப்படுகின்றன. இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல விதமான ஆய்வுகளுக்குப் பின் அவர்கள் கண்டு பிடித்த இந்த உண்மையை திருக்குஆன் அன்றே சொல்லி இருக்கிறது. மத்தியத் தரைக்கடலும், கருங் கடலும் நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன. 12,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பிரளயத்தின் போது இரண்டும் இணைந்தன. இரண்டு கடல்களும் சந்திக்கும் இடத்தில் இரண்டும் சமமான அடர்த்தியில் இல்லாததால் அடர்த்தி மிகுந்த கடலின் நீர் கீழேயும், அடர்த்தி குறைந்த கடலின் நீர் மேலேயும் சென்று 200 அடி அளவுக்கு ஒன்றின் மேல் ஒன்றாக நிற்கிறது. 12,000 ஆண்டுகள் ஆன பின்பும் அவை ஒன்றாகக் கலந்து விடவில்லை. அட்லாண்டிக் கடலும், இந்தியப் பெருங்கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தாலும் திடத்திலும், நிறத்திலும் வேறுபட்டு நிற்கின்றன. ஒன்றுடன் ஒன்று கலந்து விடவில்லை. அது போல் மத்தியத் தரைக் கடலும், அட்லாண்டிக் கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு உள்ளன.

மத்தியத் தரைக்கடல் அடர்த்தியுடன் வெதுவெதுப்பாக உள்ளதால் அட்லாண்டிக் கடலுடன் சேருமிடத்தில் அதன் மீது ஆயிரம் அடிகளுக்கு மேல் அழுத்திக் கொண்டு சுமார் 100 மைல்கள் வரை ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பரவி நிற்கின்றது. ஒன்றுடன் ஒன்று கலந்து விடவில்லை. திருக்குர்ஆன் 25:53 வசனத்தில், நல்ல தண்ணீர் கடலுடன் கலப்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது, "இரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும்" ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றது. இரண்டு கடல்கள் சந்திக்கும் போது ஒரு திரை இருப்பதாகக் கூறிய குர்ஆன், கடலுடன் நல்ல தண்ணீர் கலக்கும் போது இரண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. இதிலும் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியுள்ளது. கடலுடன் நல்ல தண்ணீரைக் கொண்ட ஆறு சேரும் போது அடர்த்தி வித்தியாசத்தின் காரணமாக மேலே நாம் காட்டியுள்ள ஒரு தடையுடன், உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும் சிறிதளவு சேர்ந்த கலவை ஒன்று உருவாகி அது மற்றொரு தடையாக நிற்கின்றது. இது எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டு களுக்கு முன் எப்படித் தெரியும்? எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

8. நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம்.அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள். (திருக்குர்ஆன்  23:18)

நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது? பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப் பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன. இந்த நிலத்தடி நீர் கடல் வழியாக பூமிக்கு வருவதாகத் தான் முதலில் நம்பினார்கள். உண்மையில் ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று இப்போது (கி.பி.1580ல்) கண்டறிந்துள்ளனர். இதனால் தான் கடலுக்கு அருகில் உள்ள நிலத்தடி நீர் உப்பாக இருப்பதில்லை. இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் (23:18) பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தி விட்டது. பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழிகாட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.

9. காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம்

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும்.அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம். (திருக்குர்ஆன்  34:12)

குர்ஆன் கூறும் காற்றின் வேகம் இவ்வசனத்தில் (34:12) ஸுலைமான் நபிக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சராசரியாக காற்றின் வேகத்தையும் கூட அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகிறான். நம் மீது வீசுகின்ற காற்று நம் மீது பட்டு, பூமியை ஒரு சுற்று சுற்றி வந்து மறுபடியும் நம் மீது பட வேண்டுமானால் அதற்கு சுமார் இரண்டு மாத காலம் தேவைப்படும். ஏனென்றால் சராசரியாக காற்று 25 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்றது. இந்த வேகத்தில் வீசுகின்ற காற்று பூமியைச் சுற்றி வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும். காற்று, ஒரே சீராகச் சுற்றி வருகிறது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. ஸுலைமான் என்ற இறைத்தூதருக்கு தனிச் சிறப்பாக அல்லாஹ் காற்றை வசப்படுத்திக் கொடுத்தபோது அவருக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்ட காற்று இரண்டு மாதத்தில் திரும்ப ஒரு சுற்று சுற்றி விட்டு வரும் என்று தான் அல்லாஹ் கூறுகிறான். இங்கே ஸுலைமான் என்ற இறைத்தூதருக்கு உரிய சிறப்பைச் சொன்னாலும் சராசரியான காற்றின் வேகத்தையும், பூமியின் சுற்றளவையும், பூமியுடைய சுழற்சி வேகத்தையும் கணக்கிட்டுப் பேசும் ஒரு விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் இதைப் பேசியிருக்கிறது. இது நிச்சயமாக மனிதனின் சொல்லாக இருக்க முடியாது; இறைவனின் சொல்லாகத் தான் இருக்க முடியும் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.  

10. வானங்களுக்கும், பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி

வானங்களும்,பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது.அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன்  35:41)

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஈர்ப்புவிசை இவ்வசனத்தில் (35:41) வானங்களும், பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வானங்களும், பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ, குறைந்தாலோ அவை சிதறிச் சின்னா பின்னமாகி விடும். இதுவும் இன்றைய அறிவியல் உண்மையைப் பறை சாற்றும் வசனமாக அமைந்துள்ளது.

11. விண்வெளிப் பயணம் சாத்தியமே

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். (திருக்குர்ஆன்  55:33)

இவ்வசனம் (55:33) விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம்; மேற்கொள்ள முடியும் என்று தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது. ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்றும் கூறுகிறது. விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்த்திராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறைவேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கிறது. அதே நேரத்தில் இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஏழு வானங்கள் வரை மனிதன் செல்ல முடியுமா என்றால் செல்ல முடியாது. ஜின்கள், ஷைத்தான்கள், வானுலகச் செய்திகளை அறிந்து கொள்வதற்காக வானத்தை நெருங்கும் போது அவர்களைத் தீப்பந்தம் விரட்டும் என்பதை அது போலவே வானவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் அந்த இலக்கு வரை மனிதர்களால் செல்ல முடியாது; ஓர் அளவிற்கு மட்டுமே செல்ல முடியும் என்பதையும் சேர்த்து திருக்குர்ஆன் சொல்கிறது. இதுவும் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பதற்கான மற்றொரு சான்றாக இருக்கிறது.    

12. உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். (திருக்குர்ஆன்  76:2)
இனப் பெருக்கத்தில் பெண்களின் பங்கு மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும் போது விந்துத் துளியிலிருந்து படைத்ததாகப் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். "துளி" என நாம் மொழி பெயர்த்திருந்தாலும், விந்துத் துளியில் உள்ள ஒரு உயிரணுவிலிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்பு விந்துத் துளி எனவும் இந்த வசனத்தில் (76:2) இறைவன் கூறுகிறான். ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினை முட்டையுடன் இரண்டறக் கலந்து, பிறகு தான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று மனிதனாக உருவாகிறது. மனித உற்பத்தியில் ஆணுடைய உயிரணுவும், பெண்ணுடைய சினை முட்டையும் கலந்தாக வேண்டும் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறி இது இறைவனின் வார்த்தை தான் என்பதை நிரூபிக்கிறது.

13. கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன
அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது.அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை. (திருக்குர்ஆன்  24:40)

ஆழ்கடலில் அலைகளும் இருள்களும் 24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன. ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன் கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம் கூறுகின்றது. பட்டப்பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளி, சிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர். சூரியனின் வெளிச்சத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன. சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது. சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது. 

இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப் பொறுத்த வரை ஒரு இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும் முழுமையாகத் தடுக்கப்படுகின்றதோ அந்த இடத்துக்கு நிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும் போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறது" அமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார். இருள்களில் பல படித்தரங்கள் உள்ளன என்பதும், பூமியின் மேற்பரப்பில் இரவில் ஏற்படும் இருளை விட, பட்டப் பகலில் 1000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சென்றால் கடுமையான இருள் ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. தமது வாழ்நாளில் கடல் பயணமே செய்யாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1000 மீட்டர் ஆழத்திற்குச் சென்று அந்த இருள்களை அனுபவித்து உணர்ந்தவர் போல் இந்த வசனத்தைக் கூறியிருப்பது, குர்ஆன் இறைவேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. 

மேலும் இவ்வசனத்தில் கடலின் ஆழத்திலும் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப்பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை. சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட போது, ஒரு பனைமரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனைமர உயரத்திற்கு மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள் ஏற்படுகின்றன. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன. சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல் நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடற்கரைக்கு அருகில் கடல் பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது. கடலின் ஆழத்திலும் பிரமாண்டமான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனைமர உயரத்திற்கு அது மேல் நோக்கி வர முடிகின்றது என்று கண்டுபிடித்தனர். ஆழ்கடலுக்கு உள்ளேயும் பேரலைகள் உள்ளன என்ற இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.

14. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான். (திருக்குர்ஆன்  43:10)
புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு திருக்குர்ஆன் பல இடங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சூரியனை ஒரு ரங்கராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை. குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும், நித்திரை தரக் கூடியதாகவும் இருக்கும். பூமி வேகமாகச் சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. "தொட்டிலாக" என்ற சொல் மூலம் இதைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். மாபெரும் அறிவியல் உண்மையை உள்ளடக்கி இறை வேதம் என்பதற்கான சான்றாக இது அமைகின்றது.   

15. ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவிஈர்ப்பு விசையே காரணம்.

ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன்  16:79)

அந்தரத்தில் நிற்கும் பறவைகள் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன. உமது இறைவன் தான் அதை வசப்படுத்தி இருக்கின்றான் என்று இறைவன் கூறுகிறான். (திருக்குர்ஆன் 16:79, 24:41, 67:19) இதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்லும் வேகம் மணிக்கு 1,07,000 கி.மீ. தூரம். மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது, பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது மோத வேண்டும். பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் அந்தப் பறவையைச் சேர்த்து இழுத்துக் கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின்பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன்பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்தப் பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது, பூமியில் மோதி செத்து விடும். இந்தப் பேருண்மையைத் திருக்குர்ஆன் அற்புதமான சொற்களால் குறிப்பிடுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும். 

நன்றி "நபி வழியில் இஸ்லாம்"



No comments:

Post a Comment