1. சிறந்த சமுதாயத்தின் அடையாளம் என்ன?
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்வதே முஸ்லிம்களின் குறிக்கோளாகும். அப்படி ஒரு முன்மாதிரிச் சமுதாயமாகத் திகழ்வதற்கு முக்கிய காரணம் அவர்களது சமூகப் பொறுப்புணர்வாகும். அதாவது, தனக்கு மட்டும் நல்லது வந்தால் போதும் என்று இருப்பது அல்ல, மாறாக மற்றவர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதே ஆகும்.
இது குறித்து அல்குர்ஆனில் (3:110) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
"நீங்கள் மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள், தீமையைத் தடுக்கிறீர்கள், அல்லாஹ்வை நம்புகிறீர்கள்." (அல்குர்ஆன் 3:110)
இதன் பொருள், ஒரு முஸ்லிம் தினமும் தொழுகை, நோன்பு போன்ற
தனிப்பட்ட வழிபாடுகளைச் செய்வது மட்டும் போதாது. மாறாக, தான் வாழும் சமூகத்தில்
என்ன நல்லது நடக்கிறது? என்ன தீமை பரவுகிறது? என்பதையும் கவனித்து, நல்லதை ஊக்குவிக்க வேண்டும், தீமையைத் தடுக்க
முயற்சிக்க வேண்டும். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதால்தான் அந்தச் சமுதாயம்
இறைவனிடத்தில் உயர்வு பெறுகிறது.
2. நன்மையில் ஒத்துழைத்தலும் தீமையைத் தடுத்தலும்
சமூகத்தில் ஏதேனும் அநீதி நடப்பதைக் கண்டும், ஒரு தீமை பரவுவதைக் கண்டும் ஒரு முஸ்லிம் மௌனமாக இருக்க முடியாது. ஏனெனில், மௌனம் என்பது அந்தத் தீமைக்கு மறைமுகமான ஆதரவாகிவிடும். எனவே, நன்மையை நிலைநாட்டவும், தீமையை ஒழிக்கவும் இஸ்லாம் மூன்று படிநிலைகளைக் கற்றுத் தருகிறது.
அல்குர்ஆன் வழிகாட்டல்:
"நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள், பாவத்திலும் பகைமையிலும் ஒத்துழைக்காதீர்கள்." (அல்குர்ஆன் 5:2)
உதாரணமாக, உங்களது ஊரில் ஒரு ஏழைக்கு உதவுவது நன்மையாகும். அதற்காக நண்பர்களை ஒன்று சேர்ந்து உழைத்தால் அது நன்மையில் ஒத்துழைத்ததாகும். ஆனால், ஒருவர் மீது பொய்க் குற்றம் சுமத்தி அவரை வீழ்த்த முயல்வது பாவமாகும். அதில் நீங்கள் பங்கு கொள்வது பாவத்தில் ஒத்துழைத்ததாகும்.
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரேனும் ஒரு தீமையைக் கண்டால், அவர் அதைத் தமது கையால் தடுக்கவும், அதற்கு இயலாவிட்டால் தமது நாவினால் தடுக்கட்டும், அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் அதனை வெறுக்கட்டும். இதுவே இறை நம்பிக்கையின் பலவீனமான நிலையாகும்." (ஆதாரம்: முஸ்லிம்)
இதன் விளக்கம்:
1) கையால் மாற்றுதல் - உங்களுக்கு அதிகாரமும் வலிமையும் இருந்தால், நேரடியாகத்
தீமையைத் தடுத்து நிறுத்துங்கள். (உதாரணம்: ஓர் அநீதியான சட்டத்தை மாற்றுவது)
2) நாவினால் தடுத்தல் - உங்களால் நேரடியாகத் தடுக்க முடியாவிட்டால், வாயினால் (பேச்சு, எழுத்து, ஆலோசனை மூலம்) எதிர்ப்புத் தெரிவியுங்கள். (உதாரணம்: ஒரு தவறான செயலைக் கண்டித்துப் பேசுவது
3) உள்ளத்தால் வெறுத்தல் - இதுவும் சாத்தியமில்லை என்றால், அந்தத் தீமையை உங்கள் மனதுக்குள் வெறுங்கள். அதனுடன் உடன்பாடு காட்டாதீர்கள்.
இதேவேளை தீமைகளைத் தடுப்பதில் நாம் அலட்சியமாக இருந்தால், ஒட்டுமொத்த சமூகமும் வீழ்ச்சியடைந்து இறை தண்டனைக்கு ஆளாகும் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
3. பிறர் நலனில் உண்மையான நம்பிக்கை (ஈமான்)
ஒரு மனிதன் "நான் இறைவனை நம்புகிறேன்" என்று சொல்வது மட்டும் போதாது. அவனது நம்பிக்கை உண்மையானதா என்பதை அவனது செயல்கள் மற்றும் மற்றவர்களிடம் அவன் காட்டும் அன்பு என்பவை உறுதிப்படுத்தும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தனக்கு எதை விரும்புகிறாரோ, அதையே தனது சகோதரனுக்கு (அல்லது சகோதரிக்கு) விரும்பும் வரை அவர் உண்மையான முஃமின் (இறைநம்பிக்கையாளர்) ஆக மாட்டார்." (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
உதாரணமாக உங்களுக்குப் பிடித்த உணவு, வசதியான வீடு, நல்ல கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை - இவை அனைத்தும் உங்களுக்கு வேண்டும். அதே போலவே, உங்கள் அண்டை வீட்டுக்காரருக்கும், உங்கள் உறவினருக்கும், ஏன் உங்களுக்குத் தெரியாத ஒரு அந்நியனுக்கும் இவை கிடைக்க வேண்டும் என்று நீங்கள் உளமார விரும்ப வேண்டும். அப்போதுதான் உங்கள் ஈமான் முழுமை பெறுகிறது.
மேலும், நபிகள் (ஸல்) கூறினார்கள்:
"ஒரு அடியார் தனது சகோதரருக்கு உதவி புரிந்து கொண்டிருக்கும் வரை, அல்லாஹ் அந்த அடியாருக்கு உதவி புரிந்து கொண்டிருக்கிறான் " (ஆதாரம்: முஸ்லிம்)
அதாவது, நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது, அதற்கான நற்பலனை இறைவன் உங்களுக்குக் கட்டாயம்
தருவான். ஒரு உதவி செய்தால், அதை விடச் சிறந்த முறையில் இறைவன் உங்கள் தேவைகளைப்
பூர்த்தி செய்வான்.
4. சமூகப் பணியும் ஒழுக்கமும் - செயல்முறை விளக்கம்
"பிறர் நலம் நாடுதல்" என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் நின்று விடக்கூடாது. அது நடைமுறையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாகச் சொல்லித் தருகிறது.
அ) பேச்சில் ஒழுக்கம்:
ஒரு முஃமின் (இறை நம்பிக்கையாளர்) எப்போதும் நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். ஒருவரைப் பற்றி புறங்கூறுதல், பொய் சொல்லுதல், கிண்டல் செய்தல் போன்றவை கூடாது. ஒரு வேளை நல்ல வார்த்தைகள் பேச முடியாவிட்டால், அமைதியாக இருப்பதே சிறந்தது. இது நபிகளாரின் போதனையாகும்.
ஆ) மனிதாபிமான செயல்கள்:
ஏழைகளுக்கு உதவுதல்: உங்களிடம் உள்ள செல்வத்திலிருந்து ஒரு பகுதியை (ஸகாத், தர்மம்) ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது.
அனாதைகளைப் பராமரித்தல்: தந்தையை இழந்த சிறு குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதும், அவர்களுக்குப் படிப்பும் பாதுகாப்பும் அளிப்பதும் பெரும் நற்செயலாகும்.
நோயாளிகளை நலம் விசாரித்தல்: உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவரைச் சென்று பார்ப்பதும், ஆறுதல் சொல்வதும் மிகப் பெரிய நல்லொழுக்கமாகும்.
அண்டை வீட்டாருடன் இணக்கமாக வாழ்தல்: அண்டை வீட்டுக்காரர் பசியுடன் இருக்கும்போது நீங்கள் வயிறார உண்டு உறங்கச் செல்வது முழுமையான நம்பிக்கையின் அறிகுறியல்ல. அவருக்கும் உதவ வேண்டும்.
இ) பொதுநலனில் அக்கறை:
சமூகத்தில் பரவும் ஊழல், வஞ்சனை, பொய், இலஞ்சம் மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற கெடுதல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், அவற்றைத் தடுக்க முயற்சிப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அதைக் கண்டும் காணாதது போல் இருந்தால், அந்தச் சமூகத்தின் அழிவு நிச்சயமாகும்.
"மனிதர்களில் சிறந்தவர் யார்?" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர்கள் கூறினார்கள்: "மனிதர்களில் சிறந்தவர், மற்ற மனிதர்களுக்கு அதிக நன்மை செய்பவரே." (ஆதாரம்: அஹ்மத், தப்ரானி)
தொகுத்து நோக்குகின்ற போது, பிறர் நலனுக்காக வாழ்வதே இஸ்லாத்தின் உண்மையான சாராம்சமாகும். நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியை நாம் ஒரு கடமையாகக் கொண்டு, அன்பு, இரக்கம், நியாயம் ஆகிய பண்புகளுடன் செயல்படும்போதுதான், நம் சமூகம் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், இறைவனின் அருளுக்குப் பாத்திரமாகவும் மாறமுடியும்.
எனவே, நாம் ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, இறைவனின் திருப்தியையும், மனிதகுலத்தின் நன்மதிப்பையும் பெற முயற்சிப்போம்.
"நன்மையில் ஒத்துழைப்போம், தீமையை ஒன்று சேர்ந்து தவிர்ப்போம்!"

No comments:
Post a Comment